Monday 15 July 2019

இன்றைய தியானம் :"கர்த்தர் நிறைவேற்றுவார்"

இன்றைய தியானம் :"கர்த்தர் நிறைவேற்றுவார்"


தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 

பரலோகத்தின் தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக.


எரேமியா 29:11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.


 1. குறித்திருக்கிறதை நிறைவேற்றுவார்.

யோபு 23:14  எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.


 2. நீதியோடே நிறைவேற்றுவார்.

ரோமர் 9:28  அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.


 3. வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றுவார்.

சங்கீதம் 20:5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.


 4. ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவார்.

சங்கீதம் 20:4 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.


 5. நல் வார்த்தைகளை எல்லாம் நிறைவேற்றுவார் 

எரேமியா 33:14 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.


கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக.




கர்த்தரின் அழைப்பு !

கர்த்தரின் அழைப்பு !


அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன் என்றான். - (யாத்திராகமம் 4:10).


சகோ. பக்தசிங் என்ற தேவ ஊழியரை பற்றி நம்மில் அநேகர் அறிந்திருக்கலாம். அவர் ஆசியாவிலுள்ள அளவற்ற மக்களுக்கு ஆவிக்குரிய தகப்பனாகவும், உலகின் பல பாகங்களிலுமுள்ள விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய ஒரு முன்மாதியாகவும், விளங்கினார். வேதத்தை நேசித்து, கர்த்தருக்கு வைராக்கியமாய் ஊழியஞ்செய்யும் ஒரு கூட்ட ஊழியர்களை உருவாக்கிய பரிசுத்தவான் அவர். தேவன் அவரை ஊழியத்திற்கு அழைத்த விதத்தை காண்போம்.


1930 - ஆம் அண்டு இவர் இரட்சிக்கப்பட்டடார். இரட்சிக்கப்பட்ட புதிதில் கனடா நாட்டில் வின்னிபெக் என்ற நகரிலுள்ள ஒரு ஆராதனையில் கலந்து கொண்டு வெளியேறிய சமயத்தில், முன்பின் தெரியாத ஒருவர் அவசரமாக ஓடி வந்து, அவருடைய கரத்தை கெட்டியாக பிடித்து கொண்டார். 'சகோதரனே, நீர் ஏன் இந்தியாவிற்கு திரும்பி சென்று அங்கே சுவிசேஷத்தை பிரசங்கிக்க கூடாது?' என்று கேட்டார். அதற்கு பக்தசிங், 'நான் ஒரு பொறியாளர், பொறியியலை கற்பதற்காக பல ஆண்டுகள் பயின்றிருக்கிறேன், மேலும் எனக்கு கொன்னலும் திக்கு வாயும் உண்டு. ஒரு சிறிய கூட்டத்திற்கு முன்பாக கூட நின்று பேசுவதற்கு என்னால் முடியாது. மேடை பயமும், சபை கூச்சமும் நிறைந்தவன், என்னை போல ஒரு தொடை நடுங்கியும், திக்குவாயும் உடையவன் எபப்டி பிரசங்கியாக முடியும்?' என்று கூறினார். அதற்கு அவர் எந்த பதிலும் பேசவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகள் இதே வார்த்தைகள் அவர் இருதய செவியில் தொனித்து கொண்டேயிருந்தது.


இப்படி கர்த்தருக்கும் பக்தசிங் அவர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் தர்க்கமும், வாக்குவாதமும் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு சாக்கு போக்கை சொல்லுவார். 'ஆண்டவரே என்னுடைய பணத்தை எல்லாம் உமக்கு அர்ப்பணிக்கிறேன், என் சம்பாத்தியத்தின் மூலமாக நான் இன்னும் அநேக ஊழியர்களை ஆதரிக்கிறேன், ஆனால் தயவு செய்து என்னை மாத்திரம் பிரசங்கியாக அழைக்க வேண்டாம்' என்று ஜெபத்தில் மன்றாடினார். ஆனால் தேவன் கூறிய பதில் என்ன தெரியுமா? 'உன் பணம் எனக்கு ஒன்றும் வேண்டாம், நீ தான் எனக்கு வேண்டும்' என்றார். பின் ஒரு வழியாக தன்னை தேவப்பணிக்கு அர்ப்பணித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, 'நம்முடைய தேவன் நம்மை ஏன் தெரிந்து கொள்கிறார் என்பது விளங்காத ஒரு புதிராகவே உள்ளது. அவருக்கு நம்மீது உரிமையிருப்பதால் அப்படி செய்கிறார். நாம் நம்மை முழுவதுமாக அவருக்கு ஒப்பு கொடுத்து, அவருக்கு கீழ்ப்படிந்து அவரை பின்பற்றும்போது அவர் நம்மிலும், நம் மூலமாகவும் கிரியை செய்கிற அவருடைய வல்லமையையும், மகிமையையும் அதிகமான அளவில் அறிந்து கொள்வோம்' என்றார்.


பிரியமானவர்களே, நாம் வேலை செய்யும் இடத்தில் நமக்கு ஒரு பொறுப்பு கொடுத்தார்களானால், அதை பெருமிதத்தோடு செய்து முடிக்கிறோம். நீங்கள் தான் ஆலயத்தின் செயலாளராக இருக்க வேண்டுமென்று விசுவாசிகள் ஏகமனதாய் கூறினார்களேயானால் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் ஆண்டவர் உங்களை பார்த்து நீ என் வேலையை செய் என்று அழைப்பாரானால், கடுகளவும் மனமின்றி தப்பிக்க முயற்சிக்கிறோம் அல்லவா? இதில் நியாயமுண்டா?


ஓரு பக்தசிங் அநேக இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக, கர்த்தருக்குள் வழிநடத்தின பரிசுத்தவானாக இருந்தது போல கர்த்தர் யாரை தெரிந்து கொள்கிறாரோ அவர்களை அவர் வல்லமையால் நிரப்பி, அவர்கள் மூலம் பெரிய காரியங்களை நிச்சயமாய் செய்கிறார். தேவன் உங்களை திட்டமும் தெளிவுமாய் அழைத்திருந்தால் சாக்கு போக்கு சொல்லாதபடி மனவிருப்பத்துடன் முன்வாருங்கள். கர்த்தர் உங்களை கொண்டு பெரிய காரியங்களை செய்வார். ஆமென் அல்லேலூயா!


சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு

என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு

அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்

இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்


மந்தையில் சேரா ஆடுகளே

எங்கிலும் கோடி கோடி உண்டே

சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே

தேடுவோம் வாரீர் திருச்சபையே - மந்தையில்


அழைக்கிறார் இயேசு

அவரிடம் பேசு நடத்திடுவார்  


ஜெபம்


எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, சகோ. பக்தசிங் போன்ற அருமையான  தேவ ஊழியர்களுக்காக, பரிசுத்தவான்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்கள் எங்களை விட்டு பிரிந்தாலும், அவர்களை கொண்டு தொடங்கப்பட்ட ஊழியங்கள் இன்றும் கனிகளை கொடுப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்களை போன்று நீர் அழைக்கிற ஒவ்வொருவரும் உண்மையாய் தங்களை உமக்கு அர்ப்பணித்து ஊழியம் செய்ய கிருபை செய்யும்எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Friday 2 March 2018

சோதனை வேளையில்

தேவனுடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக.


இன்றைய தியானம்

சோதனை வேளையில் 

கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால்.... எபிரெயர் 4:2 


இன்றைய வேதவசனம்

யாத்திராகமம்: 16:1-10 , எபிரெயர்: 4:1-16. 


எல்லாப் பாடங்களையும் படித்து முடிக்கும் வரை சாப்பாடு தரமாட்டேன் என்று தாய் கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். வேறு வழியின்றி பையன் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தான். இன்னும் பாதிப் பாடம் படிக்க வேண்டியிருந்த நேரத்தில் சில பிஸ்கட்டுகளையும், கொஞ்சம் பாலையும் பையனுக்கு தாய் கொடுத்தாள். சாப்பாடு தரமாட்டேன் என்று சொல்லி விட்டு எதற்காக பிஸ்கட்டும், பாலும் தருகின்றீர்கள் என்று பையன் கேட்டான். பாடங்களை படித்து முடித்தால் சாப்பாடு. ஆனாலும் அதுவரை பசியின் வேகத்தைக் கொஞ்சம் குறைக்கத்தான் பிஸ்கட்டும், பாலும் என்றாள்.


நாம் சில தேவ நன்மைகளுக்குத் தகுதியாகிட தேவன் சில சோதனைகளை அனுமதிக்கின்றார். சில சோதனைகளைக் கடந்து ஜெயம் பெற்றவர்களாக மாறும் போது, நமக்காக பெரிய நன்மைகளும் , ஆசீர்வாதங்களும் காத்திருக்கும். ஆயினும் சோதனைகளின் பாதைகளில் நமக்கு இளைப்பாறுதல் அவசியம். சோதனைகளில் தோற்றுப் போகாமல் தொடருவதற்கும் நமக்கு கொஞ்சம் பலம் தேவை. எனவே தேவன் ஏதாவது ஒரு வழியில் நம்மை தேற்றவும் திடப்படுத்தவும் செய்கின்றார்


யோசேப்பின் எதிர்காலம் பிரமாதமாக அமையப்போகிறது. ஆயினும் அது எளிதாக வந்துவிடாது. அதற்காக சில வருத்தமான பாதைகளைக் கடந்து போயாக வேண்டும். அந்த வருத்தத்திற்குரிய பாதைகளில் தேவன் அவனுக்கு சில ஆதரவுகளை ஏற்படுத்திக் கொடுத்தார். தேவன் குறித்த காலம் வரும் வரை அந்த ஆதரவுகள் ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுத்து தொடர்ந்து முன்னோக்கிப் போகச் செய்யும். தேவன் யாரையும் சோதனையின் பாதையில் அவரவர் தங்களின் பலத்தின்படி அதில் நடக்கட்டும் என்று விட்டு விடுவதில்லை. சில நல்ல நோக்கங்களுக்காக வருத்தங்களையும் பாரஙகளையும் காணச் செய்தாலும் சோர்ந்து போகாதிருக்கும் படியான கிருபைகளைத் தந்து கொண்டேதானிருப்பார்


கானகத்தில் பிரயாணம் செய்த இஸ்ரவேல் ஜனங்களுக்கான ஆசீர்வாத உணவு அல்ல மன்னா. தேனும் பாலும் ஓடுவது போன்ற வளமையான தேசத்திற்கு வந்து சேரும்வரை அவர்களின் பிரயாணத்தில் அவர்களை ஊக்குவிக்கத் தேவன் செய்த தற்காலிக ஏற்பாடே அது. ஆனால் அவர்களோ அதனை அறியவில்லை. அவர்கள் தங்களுக்கு கிடைத்த சாதாரணமான உணவை எண்ணி முறுமுறுக்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால், தேவனுடைய மனதை அவர்கள அறியவில்லை. தேவன் அவர்களுக்காக ஆயத்தமாக்கி வைத்திருந்த கானானின் ஆசீர்வாதங்களை அவர்கள் விசுவாசக் கண்களால் பார்க்கவில்லை. எனவே அவர்கள் சோர்வினாலும், சலிப்பினாலும் தங்களுடைய பயணத்தின் காலத்தை மிக மிக அதிகமாக்கிக் கொண்டார்கள்.


இன்றைய சிந்தனைக்கு:

நீ தேவனோடிருந்தால் பாடுகள் உன்னை பாழாக்க அல்ல உன்னைப் பலப்படுத்தவே வருகிறது.


நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் அனைவரோடும் கூட இருப்பதாக. ஆமென். ஆமென்.

ஜெபம்

ஜெபம்

அன்புள்ள ஆண்டவரே நாங்கள் நடக்க வேண்டிய வழியை எங்களுக்கு கற்றுத் தாரும். நாங்கள் தடுமாறும் பொழுது தடுமாற்றம் இன்றி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து நடக்க வேண்டிய வழியை எங்களுக்கு காண்பியும். உம்முடைய பாதையை கண்டு நடக்கத் தக்கதாக உம்முடைய வெளிச்சத்தை காணும் படி எங்கள் கண்களை திறந்தருளும் ஸ்வாமி. எங்கள் வாழ்க்கையில் நடக்கும் சிறிய அன்றாட நிகழ்வுகளுக்கும், பெரிய முடிவுகளுக்கும் நாங்கள் இதைக் கேட்கிறோம். எங்களுடைய எல்லா செயல்களிலும் முழுவதும் கூட நீர் இருந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு போதித்தருளும். நாங்கள் உமது சத்தத்தை கூர்ந்து கவனிக்கச் செய்யும். எல்லா நேரங்களிலும் உமது பேச்சுக்களும், நீர் சொல்வதும், செய்கின்ற செயல்களும் எங்கள் அறிவுக்கு விளங்கி கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம் ஸ்வாமி. இது எங்களுக்கு பிரச்சினையும் உம்மை புரிந்து கொள்கின்ற திறன் இல்லாமையும் என்பது எங்களுக்கு தெரியும் கர்த்தாவே. உம்முடைய நாமத்தினாலே உம்மை அறிகின்ற அறிவையும், புரிந்து கொள்கின்ற ஞானத்தையும் எங்களுக்கு தாரும் ஆண்டவரே. உம்மை புரிந்து கொள்ள எங்களுக்கு உதவி புரியும்அதுவே நாங்கள் உமக்கு கீழ்படியவும் நீர் எங்களிடம் எதிர்பார்கின்ற காரியங்களை செய்யவும் எங்களுக்கு துணை புரியும். ஆமென்.

நினைவிற்க்கு...

எரேமியா 29:11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.


எப்போதும் நாங்கள் உமக்கு கனி கொடுக்கும் ஒரு நல்ல மரமாக இருக்க விரும்புகிறோம். கடவுளே எங்கள் உள்ளத்தில் இப்பொழுதே வாரும், உமக்குப் பிரியமில்லாத காரியங்கள், செய்கைகள் எங்களிலும் எங்கள் உள்ளத்திலும் இருக்குமானால் தயவாக அதை எங்களுக்கு வெளிப்படுத்தி எங்களை சுத்தப்படுத்தும் கர்த்தாவே. எப்பொழுதும் எந்நேரமும் பரிசுத்தத்தோடும் உண்மையோடும் கடவுளுக்குள்ளாக நடக்க எங்களுக்கு கற்றுத் தாரும். தேவையற்ற கவனச் சிதறல்களிலிருந்து எங்களை காபாற்றி உம்முடைய வார்த்தையை, சத்தத்தை நோக்கி பார்க்க எங்களுக்கு உதவி புரியும். அதில் தடைகளின்றி உம்மோடு நடந்து வர உதவி செய்யும். ஆமென்.


பிரியமான கடவுளே எல்லாவற்றையும் எங்களுக்கு கற்றுத் தாரும். உம்மை அறிந்து கொள்ளும் ஞானத்தையும் , உம்முடைய வார்த்தையை எங்களில் தக்க வைத்துக் கொள்ளவும் உதவிபுரியும். எதை நாங்கள் வாசிக்க வேண்டும் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்தும், அப்பக்கஙகள் உயிருடன் இருக்கும் படி செய்யும். எங்களுடைய தியான நிலையின் போது நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய உம்முடைய வார்த்தைகளை எங்களுக்கு வெளிப்படுத்தும். உம்முடைய நல் மனதையும், நற் போதனைகளையும் எங்களுக்கு கற்றுத் தாரும். உம்முடைய சாந்த இருதயத்தில் இருப்பதை நாங்கள் தேர்ந்தெடுத்து உம்மிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள எங்களுக்கு உதவி புரியும். ஆமென்.

Jesus Changed my life

Praise The Lord