நொண்டியானவனுக்கு ஒரு வார்த்தை
நொண்டியானவனை இரட்சித்து, (செப்.3:19)
ஆண்களிலும் பெண்களிலும் நொண்டியானவர் பலர் இருக்கிறார்கள். ஒரு மணிநேரத்தில் பல தடவை தாங்கி தாங்கி நடப்பவரை நீங்கள் சந்தித்திருக்கலாம். அவர் சரியான பாதையில் ஊக்கத்தோடு ஓட ஆர்வமுள்ளவராயிருக்கலாம். ஆனால் அவர் நொண்டியாக இருப்பதால் அதில் சரியாக நடந்து போக முடிவதில்லை. மோட்சப் பாதையில் பல நொண்டிகள் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனதில் நமக்கு என்ன நேரிடுமோ? ஓரு வேளை பாவம் நம்மை மேற்கொண்டு விடும். சாத்தான் நம்மை விழத்தள்ளி விடுவான். அவ்வப்போது நின்று விடுவது தான் நம் தன்மையாகும். ஆண்டவர் ஒருபோதும் நம்மைச் சிறந்த போர் வீரராகவாவது அவர் செய்தியைக் கொண்டு செல்லும் தூதராகவாவது ஆக்கவும் முடியாது என்று நினைத்துக் கொள்ளலாம். பரவாயில்லை அவர் நம்மை இரட்சிப்பார் என்பதே சிறந்த செய்தியல்லவா? நொண்டியானவனை இரட்சிப்பேன் என்று அவர் கூறுகிறார். நம்மை இரட்சிப்பதில் அவர் நம்மை அதிகம் மகிமைப்படுத்துவார். எப்படியெனில் இந்த நொண்டி எப்படிப் பந்தயத்தில் ஓடி கிரீடத்தைப் பெற்றான்? என்று எல்லாரும் கேட்பார்கள். அவ்வமயம் சர்வ வல்லவரின் கிருபையையே எல்லாரும் புகழுவார்கள்.
ஆண்டவரே நான் நம்பிக்கையிலும் வேண்டுதலிலும் புகழ்வதிலும் ஊழியத்திலும் பொறுமையிலும் தயக்கமுள்ளவனாயிருந்தாலும் என்னை இரட்சியும் என்று வேண்டிக்கொள்கிறேன். என்னைப் போன்ற நொண்டியை நீர் ஒருவர் தான் இரட்சிக்க முடியும். நான் மிகவும் பின்தங்கியவருள் ஒருவனானபடியால் நான் அழிந்து போக விட்டு விடாதேயும். உம்முடைய யாத்திரிகரில் மந்தமானவனாகிய என்னை உம் கிருபையினால் சேர்த்துக் கொள்ளும் என்று வேண்டினேன். அப்படியே ஆகட்டும் என்று அவர் சொல்லி விட்டார். ஆகையால் யாக்கோபு ஜெபத்தில் நீடித்திருந்து வெற்றி பெற்றதைப்போல் என் நரம்பு சுருங்கிப்போனாலும் நான் முன்னேறிச்செல்வேன்.
No comments:
Post a Comment