Saturday, 27 June 2015

Today's devotion by Sister.Mary

இன்றைய தியானம்.
 
என் ஜெப வீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன். - ஏசாயா 56: 7
 
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே,
இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
 
பிரியமானவர்களே, ஏசா.2:2ல் கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம், பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள் என்று ஏசாயா எழுதுகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எருசலேமின் தேவாலயத்துக்குள் பிரவேசிக்கையில் அங்கு விற்கிறவர்களும், கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் துரத்தி, என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது என்று பரிசுத்தப்படுத்தி ஜெபவீட்டைக்குறித்து பேசுகிறதை மத்21:13லும், மாற்.11:17லும், லூக்கா19:46லும் வாசிக்கிறோம்.
 
எனக்கன்பானவர்களே, கர்த்தருடைய ஜெபவீடு நாம்தான். நம் ஒவ்வொருவருடைய சரீரத்தையும் பரிசத்தமும்,
தேவனுக்கேற்கும் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 12:1ல் எழுதுகிறார். நம்மை சிருஷ்டித்த கர்த்தர் வாசம் பண்ணும் இந்த சரீரத்தை பரிசுத்தமான ஆலயமாக பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை.
 
அதுமாத்திரமல்ல, பிரியமானவர்களே, நாம் எப்போதும் எபி.13:15ன்படி அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்கு செலுத்த வேண்டும் என்று பவுல் எழுதுகிறார்.
 
இதை வாசிக்கும் பிரியமானவர்களே, அவருடைய ஜெபவீட்டுக்கு ஒவ்வொரு கர்த்தருடைய நாளிலும் குடும்பமாக கடந்துச் செல்லும் நாம், நம்மை ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்படிதலுக்கும், இயேசுவின் இரத்தம் தெளிக்கப்படுதலுக்கும், தெரிந்துக்கொள்ளப்பட்ட பரதேசிகளாக வாழ, கிருபையிலும். சமாதானத்திலும் பெருகி பரலோக சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு எதிர்ப்பார்போடு கடந்து செல்லுவோம். அவருடைய ஜெபவீட்டிலே, துதித்து, ஆராதித்து, வார்த்தையை தியானிக்கும்போதே நம்மை மகிழப் பண்ணுவார். உங்கள் சரீரமாகிய தேவனுடைய ஜெபவீட்டை பரிசுத்தமாய் காத்துக்கொள்ளவும் கிருபைத் தருவார்.  
 
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், பிதாவாகிய தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியானவருடைய ஐக்கியமும் உங்களனைவரோடும் இந்நாளில் இருப்பதாக.

1 comment:

  1. God says,
    Lean on Me in all situations.Release your life to Me. Give Me your anxieties, plans, and goals, and let Me be your salvation in everything.

    ReplyDelete

Jesus Changed my life

Praise The Lord